காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2

புலன்களின் உள்ளீடுகள் நம்மை தாக்குகையில் நியூரான்கள் தொடர்ச்சியாக மூலக்கூறுகளை உமிழ்ந்தபடி இருப்பவை. ஆனால் இந்த புலன்களின் தாக்கங்களை நம் நரம்புமண்டல செயலியக்கம் முழுமையாக அனுமதிப்பதில்லை. இல்லையெனில் நம் மூளை தொடர்ந்து அதீத இயக்க நிலையில் செயல்பட்டு நிலையழியும். அனைத்து புலன் உள்ளீடுகளுக்கும் ஒரே அளவில் செயல்படாமல் செயலியக்கத்தினை குறைப்பதில் காபாவின் பங்கு முக்கியமானது. இந்த காபா எனும் காமா அமினோ ப்யூட்ரிக் அமிலம், க்ளூடாமேட் எனும் செயலியக்கத்தை அதிகரிக்கும் வேதிப்பொருளிலிருந்து உருவாக்கப்படுவது பரிணாமத்தின் மற்றொரு அழகிய புன்னகையாகும். அல்லது மற்றொரு யின்-யாங்!

காபா உமிழும் நியூரான்கள் மொத்த நியூரான்களில் 40 விழுக்காடு என்று பல ஆராய்ச்சியாளர்களும், நியூரானிய சந்திப்புக்களில் (synapses) 1/3 காபா உமிழும் தன்மைத்தவை என சிலரும் கணக்கிடுகின்றனர். பொதுவாக மனிதனுடனான மற்ற விலங்குகளிலும் வன்மைத்தன்மையான நடத்தையை கட்டுப்படுத்துதலில் காபா உமிழ் நியூரானிய சர்க்யூட்டுக்கள் முக்கிய இடத்தினை பெறுகின்றன. எலிகளில் நியூரானியக் குழுமங்களைக் கட்டுப்படுத்தும் நியூரானிய மையங்களில் டோபாமைன் நேரடியாக ஊசியேற்றப்படுகையில் உருவாகும் அதீத சுறுசுறுப்பான இயக்கம் காபா கொடுக்கப்படுகையில் மட்டுப்படுகிறது. மட்டுப்படுத்துவதில் மட்டுமின்றி அச்ச உணர்வினை நீக்குவதிலும் காபா பயன்படுகிறது. தாயற்ற குரங்குகளின் அடிப்படை அச்ச உணர்வுகளை நீங்குவதில் காபாவினைச் சுரக்க வைக்கும் வேதிமருந்துகள் பயன்படுகின்றன. குரங்கின உறுப்பினர்களாகிய மனித இனத்தின் நாகரிக அச்ச உணர்வுகளை தணிவிப்பதிலும் காபாவினைச் சுரக்க வைக்கும் வேதிப்பொருட்கள் பயன்படுகின்றன. பேசல் காங்கிலியா (Basal Ganglia) எனப்படும் செல் தொகுதிகள் தலாமஸின் இருமருங்கும் உள்ளன. இந்த செல் தொகுதிகளின் வேதி-கட்டமைவு டோபாமைன்-காபா அமைவாகும். அவை காலம் குறித்த நமது உணர்தலில் பெரும் பங்கு வகிக்கின்றன. டோபாமைன் குறைந்து காபா அதிகமாகிற போது காலம் குறித்த உணர்தல் உறைநிலை அடைகிறது. இத்தனை மன இயக்கங்களிலும் முக்கிய மூலக்கூறாக செயலாற்றும் காபா, அகப்பயிற்சிகளின் போது முக்கிய பங்குவகிக்கும் என்பது தெளிவு.

ஸென் பௌத்தத்தில் கென்ஷோ என்பது எனும் சாசுவதமான இரண்டற்ற தன்மையின் கணநேர தரிசனவீச்சு. இது விழிப்பு நிலையில் ஏற்படுவது. புற உலகுடன் ஏற்படும் ஒருமை நிலை. நொடிகளுக்கு மட்டுமே நீடிப்பதும் நினைவுகளில் இனிமையாக உறைவதுமான அனுபவம். பிரக்ஞையின் சாத்தியக்கூறுகளில் மாறுபட்ட நிலையொன்றின் இருப்பினைக் காட்டி மறையும் அனுபவம் கென்ஷோ (Kensho). கென்ஷோவின் போது மூளையின் இயங்கு நிலையில் மூளையின் உள்ளுணர்வு நிலைகள் அதி உச்சத்தை தொடுகின்றன. அதே நேரத்தில் ‘நான்-எனது’ (ஆங்கிலத்தில் I-Me-Mine) எனும் அகங்கார மன அமைப்பு அழிகிறது. தானற்ற இந்நிலை அச்சத்தினை இழக்கிறது. இந்நிலையில் புற உலகு தன்னில் நீங்காத ஒருமையின் நீட்சியாக உணரப்படுகிறது. இது எவ்வாறு நிகழ்கிறது?மதுரை சொக்கப்ப நாயக்கன் தெரு 11-ஆம் எண் வீட்டில் 1896 ஆம் ஆண்டு வேங்கட ராமன் என்ற சிறுவன் இத்தகையதோர் ‘மரண’ நிலையை அனுபவித்ததும், பின்னர் தொடர்ந்து அகப்பயிற்சிகள் மூலம் என்றென்றும் சாசுவதமான சுயானந்த நிலையில் நிலைத்து பகவான் ரமண மகரிஷியாக பரிணமித்ததும் நமக்கு நினைவிருக்கலாம்.

அகப்பயிற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகையில் காபாவினால் ஏற்படும் அதே அடங்குத்தன்மை கொண்ட மாற்றங்கள் ஏற்படுவது பல ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதீத உட்கவனத்துடன் விளங்கும் அகப்பயிற்சிகளில் வேறுசில உள்ளீடுகளை காபா அடைத்துவிடுகிறது. உடலிலிருந்து கிடைக்கும் புலன் உள்ளீடுகள் நின்றுவிடுகின்றன. பரீட்டல் லோப் எனும் மூளையின் சிலபகுதிகளுக்கு புலனுணர்வுகள் செல்லுவதில்லை. ‘நானாக’ விளங்கிய புலனுணர்வு உள்ளீடுகள் அற்றுப்போகின்றன. இந்நிலையில் நனவுணர்வுடன் இருப்பவரின் நான் எவ்வாறு இருக்கும்?

முப்பரிமாண வெளியில் நானிருப்பு அற்றுப்போகும். அதே நேரத்தில் பொதுவான புலனுணர்வுகள் மற்றோர் (‘கீழ்’) தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும். ஆக, இந்த அனுபவ நிலையில் இருப்பவர் சாதாரணமாக இயங்கிட முடியும். இந்நிலையின் நீட்சியான இயக்கநிலையே கென்ஷோவிலும் செயல்படுகிறது எனலாம். தலாமஸ் எனும் பகுதி புறப்புல உணர்வுகளிலிருந்து சுயத்தினை – நம் நனவுலக இயங்குதலின் ‘நான்’- உருவாக்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. 1500 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பரிணமித்த லிம்பிக் அமைவின் ஒரு பகுதியே தலாமஸ் ஆகும். லிம்பிக் அமைவின் பிற பகுதிகள், ஹைப்போ தலாமஸ், அமைக்தாலா, ப்ட்யூட்டரி சுரப்பி மற்றும் கைப்போகாம்பஸ் என்பவை ஆகும்.* ஆக தலாமஸின் உள்ளீடுகளினை காபா தடை செய்துவிடுகிறது. முப்பரிமாண வெளியில் இயங்கும் ‘நான்’ ஒருவிதத்தில் தற்காலிக மரணமடைகிறது என்று கூட கூறலாம். இந்த நானுடனான மன உருவாக்கங்கள் உதிர்கின்றன. விருப்பு வெறுப்புகள் அகல்கின்றன. இந்த நான் அற்ற நிலையில் புற உலகின் அனுபவம் இங்கு கிடைக்கிறது.** ஆனால் இவை சில நிமிடங்களே நிலைத்துள்ளன. ஸென் சாதகனைப் பொறுத்தவரையில் கென்ஷோ ஒரு வீச்சு. போலித்திரை அகன்று ஒளிவீசும் சுயத்தின் முகம் கண்ட தருணம். அதன் பின்னும் நீளும் அகப்பயிற்சிகள்.

கென்ஷோ – சதோரி, பகவான் ரமணரின் மரண அனுபவம், அவற்றின் நரம்பியக்க இணைகள் நாம் கண்டோம். எனில் ஆன்மிக அனுபவங்கள் என்பவை மூலக்கூறுகள் நடத்தும் நடனத்தின் விளைவுதானா? காரிய-காரணங்களின் அம்புகளுக்கு அப்பாலான இயக்கமே மூளையில் நடைபெறும் இயக்கங்கள். எவ்வாறு ஒரு குறிப்பிட்ட பிம்பத்தினை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு மூளையின் ‘உயர்’ பகுதிகளிலன்றி ‘கீழ்’ நிலை நியூரானிய இயக்கங்களிலேயே தொடங்குகிறது என்பதனை முன்பு கண்டோம். அகப்பயிற்சிகளிலும் இதே வித இயக்கச் செயல்பாடுகள் இருக்குமெனில் எங்கு தொடக்கம் எங்கு முடிவென கணித்திடலில் எவ்வித பொருள் இருக்கக்கூடும்? காபாவின் சுரப்பும், க்ளூடாமேட் உற்பத்தியும் தொடங்கிட, நின்றிட மூளையின் ‘உயர் கேந்திரத்திலிருந்து’ கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என பழைய ‘தலைமை செயலக’ பார்வை கூறிடும். ஆனால், உடலெங்குமாக பரவிப் பரிணமித்து முகிழ்த்தெழுந்து முடிவில் ஆயிரமாயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாக மலர்ந்திடும் அனுபவத்தின் நரம்பியக்கம் இன்னமும் பல்லாயிரம் இயங்கியல் மர்மங்களை தம்முள் கொண்டுள்ளது.

இன்று ஆன்மிக அனுபவங்கள் அதற்கான தேடல்கள் அவற்றின் அக-புற உண்மைத்தன்மைகளை அறிதல் இத்தகைய அனுபவங்களின் நரம்பியல் மற்றும் பரிணாம காரணிகளை தேடுதல் ஆகியவை இணைந்து உருவாகியுள்ள புதிய புலம் Neurotheology-நியூரானியஇறையியல். தியான அனுபவங்களின் போது காபா உமிழும் நியூரானிய பகுதிகளின் ஒத்திசைவு இயக்கங்கள் (குறிப்பாக பேசல் காங்கிளியா) ஆராயப்படுவது, அக அனுபவங்களின் நியூரானிய-இணைகளை மேலும் அறிந்திட வழிவகுக்கும்.

குறிப்புகள்:

* (தலாமஸில் காபாவின் இயக்கநிலை என்பதற்கு ஒரு பரிணாம பின்புலமும் உள்ளது. பொதுவாக பாலூட்டிகளில் காபா செயல்பாடு பாலூட்டிகளல்லாத விலங்குகளைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளது.)

**சுவாரசியமான விஷயமென்னவென்றால் இறைதூது அடிப்படையிலான அனுபவங்கள் -அச்சமூட்டும்படியாக கபிரியேல் போன்ற இறைதூதனின் இருப்பினை உணர்வது போன்றவை- பரிசோதனை சாலைகளில் மீள்-உருவாக்கப்பட்ட போது (உ-ம்: பெர்சிங்கர் பரிசோதனைகள்) இதே லிம்பிக் அமைவின் (Limbic system) ஒரு பகுதியான அமைக்தாலாவே இயக்க உச்சம் அடைந்ததென்பது கவனிக்கத்தக்கது. இந்திய-சீனவியலாளரும் அரசியல் விமர்சகருமான கொயன்ராட் எல்ஸ்டின், வஹீ எனும் இறையாவேச நிலையின் நரம்பியல் காரணிகள் குறித்த கட்டுரை நேசகுமாரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
(பார்க்க: http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nesakumar1&taid=1)

இருவித சமய அனுபவங்களில் (தியான-யோக பயிற்சிகள் சார்ந்த இறை அனுபவங்கள், இறைதூது சமயங்களின் தீர்க்கதரிசிகளின் அனுபவங்கள்) நேரெதிர் அமைவுகளின் முகிழ்வெழுச்சி மூலக்கூற்றளவிலான இயக்கங்களிலிருந்தே மேலெழும்புகின்றன. ஆழமான நரம்பியல் ஆராய்ச்சிகளின் மூலம் இறை அனுபவங்கள் பகுத்தாயப்படுவது விரிவான அளவில் வரும் நாள்களில் சாத்தியமாகலாம்.

இன்று மிகவும் பரவலாக அறியப்படும் மன-இலகுவாக்கும் யோகா பயிற்சி முறைகளில் ஒன்று ஆழ்நிலை தியானம். இதனை பயில்பவர்களின் ப்ட்யூட்டரி ஹார்மோன் சுரப்பு மாற்றங்கள் காபாவினால் ஏற்படலாம் என்கிறது 2000 இல் வெளியான ஒரு ஆய்வுத்தாள்: (Elias AN, Guich S, Wilson AF., Ketosis with enhanced GABAergic tone promotes physiological changes in transcendental meditation. http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?cmd=Retrieve&db=PubMed&list_uids=10859661&dopt=Abstract)

தலாமஸில் காபாவின் செயல்பாட்டின் பரிணாமத்தன்மை குறித்த ஒரு ஆய்வுத்தாள்: http://www.cerebromente.org.br/n15/mente/evolution_intelligence.html

இக்கட்டுரை குறித்து: இக்கட்டுரை இரு வெவ்வேறு திசைகளில் உள்ள ஆராய்ச்சி பார்வைகளை உள்ளடக்கியது. ஒன்று நேர்கோட்டுத் தன்மையற்ற இயங்கியல் மூலம் மூளையின் இயக்கத்தினை ஆராய்வது. மற்றொன்று உன்னத அனுபவங்களில் ஒரு சில நரம்புகளிடையே இயங்கும் மூலக்கூறுகளின் முக்கியத்துவத்தை காண்பது. முந்தையது பெரும்பாலும் ஸ்காட் கெல்ஸோவின் ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டது. இக்கட்டுரையின் இப்பகுதியை எழுத தூண்டியது ஜான் மக்ரோனின் ‘Wild minds’ எனும் கட்டுரையாகும். 13-டிசம்பர் 1997 ‘New Scientist’ இல் வெளியான இக்கட்டுரையின் அடிப்படையிலேயே ‘காபா:…’ கட்டுரையின் முற்பகுதி பெருமளவு அமைக்கப்பட்டுள்ளது. பிற்பகுதி கொலராடோ பல்கலைக்கழகத்தின் நியூராலஜி பேராசிரியர் ஜேம்ஸ் ஆஸ்டின் எனும் ஸென் சாதகரின் ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டிலும் பொது அம்சம் எதுவெனில், இயக்கவியல் தொடர்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆகும். இத்தகையதோர் முன்னேற்றத்தினை கிரிகாரி பேட்ஸன் முன்னறிவித்திருந்தார் என்றே தோன்றுகிறது. குறிப்பாக கேப்ராவுடனான அவரது உரையாடல்களில். (‘Uncommon Wisdom’ (ப்ளமிங்கோ,1988) பக்.86-87.) கேப்ரா பின்னாட்களில் எழுதிய ‘Web of life’ இல் கெல்ஸோவின் பார்வையுடன் பெருமளவு இணக்கமுடைய வரேலா மற்றும் மத்துரானாவின் பிரக்ஞை குறித்த பார்வைகளை விளக்குகிறார். ப்ரிகோகைனின் சுயமுகிழ்த்தெழும் தன்மை கொண்ட அமைவுகள் என்பதும் இத்துடன் தொடர்புடையதே ஆகும். ஜேம்ஸ் ஆஸ்டினின் ‘Zen and Brain’ MITயால் வெளியிடப்பட்டதாகும் (1998). காபா மற்றும் கென்ஷோ குறித்து பக்.208-210 மற்றும் பக்.610 இல் காணவும். (தன்னுணர்வு/ப்ரக்ஞை) நிலைகள் மொட்டவிழும் இயல்பு கொண்டவையாகவும் மன-உடலியக்கவியல்கள் பரிணாமமடைவதாகவும் கூறுகிறார் ஆஸ்டின்.(பக்.450) இக்கட்டுரையில் காபா குறித்து கூறப்பட்டுள்ளவை அனைத்தும் இந்நூலின் அடிப்படையில் அமைந்தவையே ஆகும்.

ஸ்காட் கெல்ஸோ, “The Complementary Nature of Coordination Dynamics: Self-organization and Agency”, Nonlinear Phenomena in Complex Systems (2002).

ஸ்காட் கெல்ஸோ, “The Complementary Nature of Coordination Dynamics: Toward a Science of the In-Between”, (In R.R. McDaniel & D.J. Driebe (Eds.) Uncertainty and Surprise in Complex Systems. Berlin, Heidelberg. Springer (2005))

நேரெதிர் கூறுகளின் ஒருங்கிணைந்த தன்மை குறித்த கெல்ஸோவின் இணையதளம்: www.thecomplementarynature.com .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *