கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3

மிசோரம்: ரியாங்குகள்

“நாங்கள் அனைத்து மனிதர்களும் இயற்கையாகவும் தமது தேர்வினாலும் பாவிகள் என நம்புகிறோம். எனவே அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் இரட்சிப்பு இம்மண்ணிலும் வானின் கீழெங்கும் ஏசுவின் மீதான நம்பிக்கையலான்றி வேறெவராலும் இல்லை என நம்புகிறோம்.” மிஸோ கிறிஸ்தவ சர்வதேச கூட்டமைப்பின் இணைய தள அறிக்கை (http://www.mcgn.org/stmfaith.html)

ரியாங்க் அமைப்பின் தலைவரான சய்பங்கா சில்சாரில் அண்மையில் கூறியது: “நாங்கள் மதமாற்றத்தினை கடுமையாக எதிர்ப்பதால் மிசோக்களால் தாக்கப்படுகிறோம். மிசோரம் கிறிஸ்தவ அதிகாரம் கொண்ட மாநிலம். அவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் ஆக வேண்டுமென விரும்புகின்றனர். சக்மாக்கள் கூட கொடுமைப்படுத்தப்படுகின்றனர். மிஸோரமில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை. நாங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக எங்கள் குரலை உயர்த்தியதால் விரட்டியடிக்கப்பட்டோம்” (தி ஆப்ஸர்வர், 8 பிப்ரவரி 1999)

” மிசோரத்திலிருந்து மிசோக்களின் தாக்குதலுக்கு பயந்து 15000 முதல் 50000 ரியாங்குகள் வட திரிபுராவில் தமது வாழ்விடத்தை விட்டகன்று தங்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் மிசோரம் சென்றுவிடுவார்கள் எனும் நம்பிக்கையில் திரிபுரா அரசாங்கம் அவர்களுக்கான உதவி உணவினையும் மருத்துவ சேவைகளையும் நிறுத்திவிட்டது. இதன் விளைவாக 16 பேர் (அகதிகள் முகாம்களில்) உணவின்றி பட்டினியால் இறந்தனர். குறைந்தது 260 பேர்கள் சரியான உறைவிட வசதிகள், மற்றும் குடிநீர் இல்லாமையால் இறந்தனர். 1400 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த அகதிகள் முகாம்களின் நிலைக்காக தேசிய மக்கள் உரிமை அமைப்பு மிஸோரம் அரசினை கண்டித்துள்ளது.” (தெற்காசிய மனித உரிமை ஆவண மையத்தின் 16 மார்ச் 2001 தேதியிட்ட அறிக்கை)

“உச்ச நீதி மன்றம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், மிஸோரம் மற்றும் திரிபுரா அரசுகளுக்கும் ஏன் ரியாங்குகள் இன்னமும் குடியேற்றப்படவில்லை என கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது .” (பிடிஐ, 13 January 2005)

அருணாசல பிரதேசம்:

இதாநகர், அக்டோபர் 17: அருணாசல பிரதேச மக்கள் நாகா பயங்கரவாதம் சீனாவினைக்காட்டிலும் பெரிய அபாயம் எனக் கூறுவது வேடிக்கையானதல்ல. மாநில, மாவட்ட அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் குறைந்தது இரண்டு மாவட்டங்கள் நாகா பயங்கரவாதிகளின் -NSCN (ஐஸாக்-முயிவா) பிடியில் வந்துள்ளதாக கூறுகின்றனர். திராப் மற்றும் சாங்க்லாங் ஆகிய இருமாவட்டங்கள் நாகலாந்தையும் மியான்மாரையும் ஒட்டி அமைந்தவை. இவை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளன. இம்மாவட்ட அதிகாரத்தை தம் வசப்படுத்த பயங்கரவாதிகள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதை பயன்படுத்துகின்றனர். 1991 இல் 2000 பேர் இருந்த கிறிஸ்தவர்கள் இப்போது 200000 ஆகியுள்ளனர். ரங்பேரா மத சமுதாய அமைப்பின் பொது செயலரான லத்சம் கிம்குன் இந்த மதமாற்றங்கள் கட்டாய மதமாற்றங்கள் என கூறுகிறார். நாகா பயங்கரவாதிகள் தமது சூறையாடலின் போது ரங்பேரா கோவில்களை உடைத்து அங்கு வாழும் மக்களை கிறிஸ்தவர்களாக மாறும்படி கூறினார்கள் என்கிறார் அவர். சங்லாங்கில் உள்ள தான்யாங் மற்றும் காங்கோ கிராமங்களை மே 13 மற்றும் மே 15 அன்று வந்த நாகா பயங்கரவாதிகள் அங்குள்ள மக்களை மதம் மாற கூறினார்கள். ஆனால் மக்கள் மதம் மாற மறுத்தவுடன் அவர்கள் கோவில்களை தீ வைத்து எரித்தனர் என்கிறார் கிம்குன். காவல்துறை ஐஜி கூறியதாவது பயங்கரவாதிகளின் மிரட்டலால் பொதுவாக கட்டாய மதமாற்றங்களை மக்கள் புகார் செய்வதில்லை என்றபோதிலும் இப்போது மக்கள் துணிச்சலாக புகார்கள் செய்ய ஆரம்பித்துள்ளனர் எனக் கூறினார். ஆறு மிசிநரிகள் மக்களை மதம் மாற கட்டாயப்படுத்தியமைக்காக அண்மையில் பொதுமக்களின் புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டு பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டனர் என அவர் கூறினார். உள்ளூர் பத்திரிகை ஆசிரியர் அவ்வாறு மிசிநரிகள் விடுவிக்கப்பட காரணம் நாகாலாந்து அரசியல்வாதிகள் கொடுத்த அழுத்தத்தினால்தான் என தெரிவித்தார். (இண்டியன் எக்ஸ்பிரஸ், நவம்பர் 18, 2003)

இரண்டு சட்ட விரோதமான பயங்கரவாத நாகா அமைப்புகளான NSCN(IM) மற்றும் NSCN(K) ஆகியவை சங்லாங் மாவட்டத்தில் உள்ள ரிமா புதாக், திகாக் புதாக், மடோன்ஹ்சா மற்றும் லாங்சோங் கிராமங்களினைச் சார்ந்த பௌத்த மற்றும் சுதேச மத நம்பிக்கையாளர்களின் இடங்களைக் கோருவதுடன் கிறிஸ்தவத்திற்கு அவர்கள் மதம் மாற வேண்டும் எனும் கோரிக்கையையும் முன்வைத்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பயங்கரவாத அமைப்புகள் கிராமவாசிகளுக்கு இரு தேர்வுகளை முன்வைக்கின்றன -ஒன்று கிறிஸ்தவத்தை தழுவுவது மற்றது மரண தண்டனை. …இந்த சட்டவிரோத அமைப்புகள் பல கிராமத்தவர்களை அஸாம் பாதுகாப்பு படையினருக்கு முக்கிய தகவல்களை அளிப்பதாக சித்திரவதை செய்கின்றனர். மறுபுறமோ பாதுகாப்பு படைகளும் உடை-உறையுள் அளிக்கும் சாக்கில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை தமக்கு தெரிவிக்கக் கோரி மக்களை துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான கிராமத்து வாலிபர்கள் இந்த இரட்டை சித்திரவதையை தாங்காமல் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். அண்மையில் பூர்வாஞ்சால பௌத்த பிக்குகள் சங்கமும், பூர்வாஞ்சல் பௌத்தர்கள் சங்கமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த பயங்கரவாத அமைப்புகளால் அமைதி விரும்பும் பௌத்த மக்களுக்கும் இதர சுதேசிய நம்பிக்கையாளர்களுக்கும் இழைக்கப்படும் மோசமான கொடுமைகள் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளன. (அசாம் டிரிபியூன்- 22, ஆகஸ்ட், 2004)

அரசியல் எதிர்வினைகள்:

இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கான மதச்சார்பற்றதெனக் கூறப்படும் அரசியலின் (so called secular polity) எதிர்வினை என்ன?

மிக சுவாரசியமான விஷயமென்னவென்றால், எந்த காங்கிரஸ் கட்சியின் அரசினை கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கின்றனரோ அதே காங்கிரஸ் குறிப்பாக சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் இக்கொலைகளை செய்யும் அமைப்பான NLFT இன் ஆதரவாளர்களான INPT யுடன் கை கோர்த்து செயல்படுகிறது.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிகார பூர்வ பத்திரிகையில் “Congress Plays Dangerous Game In Tripura” எனும் தலைப்பில் பிரகாஷ் காரட் எழுதிய கட்டுரையிலிருந்து:

” திரிபுரா பிரதேச காங்கிரஸ் தலைவர் INPT தலைவர் பிஜோய் கிரன்காலுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஜூன் 2002 இல் சந்தித்தார். காங்கிரஸ் INPT உடன் தேர்தல் ஒப்பந்தம் வைத்துக்கொள்ளும் என தீர்மானிக்கப்பட்டது ….காங்கிரஸின் ஒரே பலமும் ஆதரவும் NLFT தான். மோசமான கொடுமையான காட்டுமிராண்டித்தனமான கொலைகளை செய்துள்ள NLFT. அண்மையில் (ஜூனிலும் ஜூலையிலும்) NLFT CPI(M) மற்றும் GMP அமைப்புகளை சார்ந்தவர்களை கொல்லுவதை அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்களையும் குடும்பத்திலுள்ள பெண் உறுப்பினர்களையும் கொல்வதை அதிகரித்துள்ளனர். இதில் மிகவும் மனிதத்தனமற்ற பகுதி சிறுவர்களையும் ஏன் பச்சிளம் குழந்தைகளையும் கொல்வதுதான்….NLFT கும்பலின் பலிகளுள் சிபிஐ(எம்) தலைவரின் ஒன்றரை வயது மகளும் அடக்கம்….காங்கிரஸ் வேண்டுமென்றே இந்த படுகொலைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டது.” ( People’s Democracy, 12,ஆகஸ்ட்,2002)

ஜூலை 22-26 இல் ஜெனிவாவில் நடந்த ஒரு ஐக்கிய நாடுகள் மாநாட்டில் திரிபுரா இந்தியாவின் பகுதியல்ல என்று அறிவித்தர் சோனியாவுடன் உடன்படிக்கை செய்துகொண்ட பிஜோய் கிரன்கால் என்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தேசவிரோத சக்திகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது என வெளிப்படுத்துகிறது ஹரிபாத தாஸ் எனும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாளரின் கட்டுரை. ” காங்கிரஸின் மௌனம் அது தேசவிரோத சக்திகளுடன் கொஞ்சிகுலாவும் குற்றத்தை செய்துதான் வருகிறது என்பதனை ஒப்புக்கொள்ளும் மௌனமாகும். இது நமது வகுப்பு ஒற்றுமை, சமுதாய இசைவு, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சீர்குலைப்பதாகும்….ஜனநாயக மரபுகள், ஒழுக்க மதிப்பீடுகள் போன்றவற்றினைக் குறித்து சிறிதும் கவலைப்படாத காங்கிரஸ¤க்கு அதன் ஒரே நோக்கம் அதிகாரத்தை எவ்விதமேனும் கைப்பற்றுவதே ஆகும்.” (People’s Democracy, 1-செப்டம்பர் 2002)

சர்வதேச அறிக்கை:

சர்வதேச அளவில் குறிப்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் -இங்குள்ள ஊடகங்களால் பிரதானப்பட்டு காட்டப்படும்- இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த அறிக்கைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகளாகக் கூறப்படும் நிகழ்வுகளை விளக்கிக் காட்டும் அளவுக்கு திரிபுராவில் NLFT அமைப்பினர் நடத்தியுள்ள கொடுமைகளை விளக்குவதில்லை. ஏன் பட்டியலிடுவது கூட இல்லை.

உதாரணமாக ‘International Religious Freedom Report 2002’ எனும் அறிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்றதாக கூறப்படும் வன்முறைகளாக அந்த அறிக்கையில் இடம் பெறும் விசயங்கள் வெறும் புள்ளிவிவரங்களும் வர்ணனைகளும் மட்டுமல்ல கூடவே சமூகவியல்-அரசியல் காரணங்களும் அலசப்படுகின்றன. உதாரணமாக, ” ஆகஸ்ட் 2000 காந்தி நகர் குஜராத்தில் ஒரு கும்பல் ஒரு கிறிஸ்தவ பாதிரி கிறிஸ்தவ இலக்கியங்களை விநியோகித்ததற்காக அவரை உதைத்தது. .செப்டம்பர் 2000 இல் ஒரு கத்தோலிக்க சர்ச் தாக்கப்பட்டது. நவம்பர் 2000 இல் குஜராத் சூரத் மாவட்டத்தில் சிந்தியா கிராமத்தில் ஒரு ஹிந்து கும்பல் ஒரு சிறு சர்ச்சை (மாற்றப்பட்ட வீடு) உடைத்தது. இந்த வீட்டிற்கு சொந்தமானவர் ஒரு வனவாசி. அவர் கிறிஸ்தவராக மாறியவர். பின்னர் ஹிந்துவாக மாற விரும்பிய அவர் அவ்வாறு உடைத்த கும்பலை ஆதரித்தார். இந்திய எவாஞ்சலிக்கல் சர்ச்சின் பிஷப் இது குறித்து குஜராத் முதலமைச்சரை காண விரும்பிய போது முதலமைச்சர் அவரை பார்க்க மறுத்துவிட்டார். அது மதப்பிரச்சனை அல்ல நிலப்பிரச்சனை என்பதே இதற்கு காரணமாக கூறப்பட்டது. தாசில் நிலை நீதிமன்றத்தில் கிறிஸ்தவர்களுக்கு சாதகமாகவும், அதற்கு மேல் உள்ள மாவட்ட நீதி மன்ற தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சார்பாகவும் வந்துள்ள நிலையில் கிறிஸ்தவ அமைப்புகள் குஜராத் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன. ஜனவரி 2001 இல் உதய்பூரில் பஜ்ரங் தள் இயக்கத்தினர் இரு கிறிஸ்தவ மிசிநரிகளையும் அவர்களை பின்பற்றுபவர்களையும் ஏசுவின் வாழ்க்கைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்ததற்காக உதைத்தனர். இரு மிசிநரிகளும் வனவாசிகளை மதமாற்ற முயன்று கொண்டிருந்தவர்கள். மே 7 2001 அன்று பாதர் ஜெய தீப் எனும் கிறிஸ்தவ பாதிரி ஜாத்னி நகரில் உள்ளூர்வாசிகளால் உதைக்கப்பட்டார். அவர் ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தினைப் பரப்பும் பிரச்சார பிரசுரங்களை கொடுத்துக்கொண்டிருந்ததே இதன் காரணமாகும்.” இந்த ரீதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ‘வன்முறையை’ 2904 வார்த்தைகளில் இந்த அறிக்கை விளக்குகிறது.

மிசிநரி (missionary) என்கிற வார்த்தை பிரயோகம் கூட கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதாக விளக்குகிற இந்த அறிக்கையில் தப்பித்தவறிக் கூட கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சார இலக்கியங்கள் விக்கிரக ஆராதனை குறித்து என்ன கூறுகின்றன என்பது கூறப்படவில்லை. காலம் காலமாக ஹிந்துக்கள் பாரம்பரியமாக வணங்கும் விக்கிரக ஆராதனை விபச்சாரத்திற்கு சமானமான ஒரு குற்றமாக கூறும் கிறிஸ்தவ பிரசுரங்களை சர்வ சாதாரணமாக காட்டமுடியும். இத்தகைய வெறுப்பியல் பிரச்சாரங்களை ஒரு காரணியாக இந்த அறிக்கை எவ்விடத்திலும் ஆராயக்கூட முன்வரவில்லை.

கட்டாய மதமாற்றம் குறித்து இந்த அறிக்கை பின்வருமாறு மட்டுமே கூறுகிறது:

“கட்டாய மதமாற்றங்கள்: ஏப்ரல் 2002 இல் பாண்டிச்சேரி அரசாங்கம் ஆறு கைதிகளின் புகாரின் பெயரில் பாண்டிச்சேரி மத்திய சிறை உயரதிகாரி கைதிகளை கிறிஸ்தவ மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கூறப்பட்டதனை விசாரணை செய்ய உத்தரவிட்டது. ஆறு கைதிகள் தாம் மதமாற மறுத்தமையால் சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் மனு அனுப்பியிருந்தனர்.ஹிந்து தேசிய அமைப்புகள் அடிக்கடி கிறிஸ்தவ மிசிநரிகள் ஹிந்துக்களை -குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினரை- கட்டாய மதமாற்றம் செய்வதாக புகார் கூறுகின்றனர். கிறிஸ்தவர்கள் ஹிந்து அமைப்புகளின் ‘மறு-மதமாற்றமே’ (கிறிஸ்துவர்களை ஹிந்துக்களாக்குவது) கட்டாயத்தின் பெயரில் நடப்பதாக கூறுகின்றனர். ஆனால் இருபக்க குற்றச்சாட்டுகளுக்குமே ஆதாரங்களில்லை.”

சமுதாய மனநிலைகள் (Societal Attitudes) எனும் தலைப்பின் கீழ் NLFT குறித்த குறிப்பு வருகிறது. அதே தலைப்பின் கீழ் NLFT குறித்த குறிப்புக்கு முன்னதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஸன் “கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்தியத்தன்மையுடன் இருக்கவேண்டும்” எனக் கூறியது கிறிஸ்தவ பிஷப்புகளின் எதிர் விளக்கங்களுடன் 207 வார்த்தைகளில் விமர்சிக்கப்படுகிறது அதே அறிக்கை NLFT குறித்து கூறுவதெல்லாம் பின்வருமாறு: “கிறிஸ்தவ பெரும்பான்மை பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் சிலசமயங்களில் தாக்குபவர்களாக உள்ளனர். திரிபுராவில் கிறிஸ்தவரல்லாதவரை NLFT எனும் எவாஞ்சலிக்கல் மனப்பாங்கு உடைய வனவாசி கிறிஸ்தவ அமைப்பினைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் இடையூறு செய்யும் (harassment) சம்பவங்கள் பல நடந்துள்ளன. உதாரணமாக NLFT அமைப்பினர் ஹிந்து மற்றும் இஸ்லாமிய திருவிழாக்களை அந்த இடங்களில் தடைசெய்துள்ளனர்; பெண்களை பாரம்பரிய ஹிந்து வனவாசி உடைகளை அணிய தடைவிதித்துள்ளனர் மற்றும் பாரம்பரிய வழிபாடுகளை தடைசெய்துள்ளனர்.” இவ்வாறு ஒட்டுமொத்த NLFT இயக்கத்தின் வன்செயல்களை 70 வார்த்தைகளில் முடித்துவிடுகிறது அறிக்கை.

“ரியாங்குகள் வந்தேறிகள்……ரியாங்குகள் ஹிந்துக்கள் இல்லை”

ரியாங்குகளுக்காக அகில இந்திய அளவில் உரத்த குரல் எழுப்பி வரும் அமைப்பு வனவாசி கல்யாண் கேந்திரமாகும். 1997-98 இல் தேசிய மனித உரிமை கமிஷன் முன்னர் ரியாங்குகளின் பிரச்சினையை வனவாசி கல்யாண் கேந்திரம் எழுப்பியது. (Violation of human Rights of Members of Reang Community of Mizoram Case No.40/16/97-98) இதனையடுத்து மனித உரிமை கமிஷன் நடத்திய ஆய்வின்படியும் மிசோரம் திரிபுரா மற்றும் அசாம் அரசுகளின் 1997 இல் 10000 இல் தொடங்கிய இந்த அகதிகள் எண்ணிக்கை 30000 எட்டியிருப்பதை மனித உரிமை கழகம் அறிவித்தது. மேலும் ரியாங்குகள் சட்டபூர்வமாக மிசோரமின் மக்கள் அவர்களை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்தது மனித உரிமை கழகம். ஆனால் ரியாங்குகள் பிரச்சனை காலத்தில் மிசோ முதலமைச்சராக இருந்த லால்தெங்க்வாலா ப்ரண்ட்லைனுக்கு அளித்த பெட்டியில் ரியாங்குகள் மிசோரத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் வெளியாட்கள் எனவும் கூறினார். (ப்ரண்ட்லைன், 18 – 31 ஜூலை, 1998) ஆசிய மனித உரிமைகள் மையம் திரிபுரா அரசு அமைத்துக் கொடுத்துள்ள அகதிகள் முகாமின் நிலையை “மனிதர்கள் வாழத்தகுதியற்றது” என வர்ணித்தது. ஒரு நாளைக்கு ரூ 2.75 (இல்லை நீங்கள் தவறாக படிக்கவில்லை இரண்டு ரூபாய் எழுபத்தைந்து பைசாதான்) வைத்து மாதத்திற்கு நூறு ரூபாய்க்கும் குறைவாக இந்த மக்களுக்கு நிவாரண நிதி கிடைக்கிறது. (காஷ்மீரி அகதிகளுக்கு மாத நிவாரண நிதி ரூ 800. அதே அளவு நிதியாவது இம்மக்களுக்கு ஒதுக்கபப்ட வேண்டுமென்று கோரியுள்ளது வனவாசி கல்யாண் ஆசிரமம்). தங்களுக்கு கிடைக்கும் அற்ப ரேஷன் அரிசி கூட கிடைக்காது என்பதால் நிகழும் சாவுகளை கூட வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் ரியாங்குகள் உள்ளனர். ஆனால் லால்தெங்க்வாலா மே 1999 இல் அளித்த பேட்டியில் (ஓரியண்டல் டைம்ஸ்) ரியாங்குகள் ஆர்.எஸ்.எஸ். சதியால் திரிபுராவிற்கு சென்று அங்கு ஆர்.எஸ்.எஸ் ஹாஸ்டல்களில் வாழ்வதாக ஒரு பேட்டியில் கூறினார். திரிபுரா அரசோ மத்திய அரசின் அனைவருக்குமான கல்வி திட்டத்தை கூட இந்த மக்களுக்காக செயல்படுத்தவில்லை என்கிறது ஆசிய மனித உரிமை மையத்தின் அறிக்கை. இந்த சூழலில் வனவாசி கல்யாண் கேந்திரம் இம்மக்களின் குழந்தைகளின் கல்வி சேவையையும், மருத்துவ சேவையையும் தங்களால் இயன்ற அளவு பார்த்துக்கொள்கின்றனர். பூர்வாஞ்சல் வனவாசி கல்யாண் ஆசிரமம் 1999 இல் 19 இளைஞர்களை (மாத உபகார ஊதியம் ரூ 400) வைத்து இந்த அகதி குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வழி வகை செய்துள்ளது. அசாமின் ஹைலாஹந்தி மாவட்டத்தில் ராமகிருஷ்ண சேவா மிஷனின் சுவாமி ஷயதானந்த மகராஜ் சேவை புரிந்து வருகிறார். (ஆப்ஸர்வர்,பிப்ரவரி 8, 1999) ஆனால் திரிபுரா மற்றும் மிசோரம் அரசுகளுக்கு இந்த சேவைகள் கூட பிரச்சனையாகத்தான் இருக்கின்றன. ப்ரண்ட்லைனுக்கு அளித்த பேட்டியில் லால்தெங்க்வாலா “ரியாங்குகள் ஹிந்துக்கள் அல்ல” என்று அவர்களுக்காக ஆர்.எஸ்.எஸ் குரல் கொடுப்பதை கண்டிக்கிறார். இடதுசாரி பத்திரிகையான ப்ரண்ட்லைன் எழுதுகிறது: ” லால்தெங்க்வாலா ஆர்.எஸ்.எஸ். குறித்து விசனிப்பதில் காரணம் இல்லாமலில்லை. வனவாசி கல்யாண் ஆசிரமம் என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அகதிகள் முகாம்களில் ‘துன்புறுவோர்களுக்கு உதவிட’ தோன்றியுள்ளது. அந்த அமைப்பு இப்பிரதேசத்துக்கு வெளியே ரியாங்குகள் பிரச்சினையை எடுத்து சென்றுள்ளது. ஜனவரி மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வனவாசி கல்யாண் ஆஸிரமத்தின் பெயரில் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணனை சந்தித்து ரியாங்குகளுக்கு மிசோரமில் சுய மாவட்டம் வழங்கிட வகை செய்யுமாறு மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்க கோரிக்கை வைத்தனர்.” எனினும் ரியாங்குகளுக்காக வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் தொடர் போராட்டம் சில ஒளிக்கதிர்களை ரியாங்கு சமுதாயத்திற்கு அளித்துள்ளது. 2005 இல் வனவாசி கல்யாண் கேந்திரம் சார்ந்த சூரிய நாராயண சாக்சேனா உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதி லகோதி தேர்தல் கமிஷனுக்கும், மிசோரம் மற்றும் திரிபுரா அரசுகளுக்கும் ஏன் ரியாங்கு சமுதாயத்தை மீண்டும் மிசோரமில் வாழவைக்க வகை செய்யப்படவில்லை என கேட்டுள்ளது.

ரியாங்குகள் ஹிந்து பெயர்களை வைக்கின்றனர். ஹிந்து தெய்வங்களை வழிபடுகின்றனர். தங்களை காசியபர் பிருகு போன்ற முனிவர்களின் வழியில் வந்ததாக கூறுகின்றனர். என்ற போதிலும் அவர்களை மிசோவான லால்தெங்க்வாலா ஹிந்துக்கள் அல்ல என தீர்ப்பிடுகிறார். “ரியாங்குகள் மிசோரத்தில் உள்ளவர்கள் இல்லை. அவர்கள் 1950களில் பங்களாதேஷிலிருந்து வந்தேறிகள்…. ரியாங்குகள் நாடோடிகள். அவர்கள் ஹிந்துக்கள் அல்ல அனிமிஸ்டுகள். அவர்கள் மிசோக்களை போல ஒரிடத்தில் வாழ்பவர்களல்ல ரியாங்குகள் கூறுவது போல அவர்களுக்கு கோவில்கள் கிடையாது.” ஜூலை 18 1998 ப்ரண்ட்லைன் பேட்டி. அதாவது கிறிஸ்தவ பெரும்பான்மை பிரதேசங்களில் நீங்கள் ஹிந்துவா இல்லையா என்பது கூட பிறர் தீர்மானிக்கும் விசயம்தான். இதுவும் போதாதென்று அவர்களுக்காக தேசிய அளவில் குரல் எழுப்புவது கூட தவறு அல்லது தேவையற்ற விசயம் என்பது போல காட்டப்படுகிறது. சுருக்கமாக, கிறிஸ்தவர்களாக மதம் மாறவும் மிசோக்களுக்கு அடங்கிப் போகவும் மறுத்த ஒரே பாவத்திற்காக இந்த சமுதாய மக்கள் கொடூரமான சாவினை ஏற்கவேண்டியதுதான். அவர்களுக்கு உதவுவதும் அவர்களுக்காக குரல் எழுப்புவதும் கூட வகுப்புவாதம்தான்.

வடகிழக்கின் கிறிஸ்தவ ஆலயங்கள் எழுப்பும் மணியோசை இன்றைக்கு ரியாங்குகளுக்கும் ஜமாத்தியாக்களுக்கும் சாவுமணியாக ஒலிக்கிறதாக இருக்கலாம். நாளை அது தமிழ்நாட்டில் விக்கிர ஆராதனை செய்யும் கடைசிக் குழந்தைக்காகவும் எழுப்பப்படும் மரணமணி ஓசையாக இருக்கலாம். ஏனெனில் விவிலியம் கூறுகிறது…

“நீங்கள் அவர்களுக்கு செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப் போடவேண்டும்.” (பைபிள்: உபாகமம் 7:5)

“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்.”
(பைபிளில் ஏசு சொன்னது: மத்தேயு 12:30) “பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, போர்வாளையே அனுப்ப வந்தேன். எப்படியெனில் மகனுக்கும் அப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.”
(பைபிளில் ஏசு சொன்னது: மத்தேயு 10: 34-35)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *